Thursday, August 27, 2009

கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்

வணக்கம் தமிழ் உறவே
சில தினங்களிற்கு முன் சிறிலங்கா அரசின் தமிழினஅழிப்பை ஆதாரங்களுடன் ஒரு காணொலி ஒன்று ஆங்கில ஊடகமொன்றினால் வெளியிடப்பட்டது. இதனை நீங்கள் எல்லோரும் அறிந்து இருப்பீர்கள். சிறிதளவேனும் கோபப்பட்டிருப்பீர்கள். உங்களின் கோபம் விளங்குகின்றது.
கோபம் கொள்வதுடன் நின்றுவிடாமல் அவ்வாதாரங்களை எவ்வாறு அனைத்துலக நீதிமன்றங்களிற்கு எடுத்துச்சென்று எப்படியெல்லாம் இனவாதிகளிற்கு தண்டனை பெற்றுக்கொடுக்கலாம் என்று சிந்திச்சுச்செயற்படவேண்டிய கடமையும் நம்மிடம் இருந்தாகவேண்டும்.

அண்மையில் லண்டனில் வசிக்கும் என்னுடைய நண்பர்கள் சிலருடன் கதைக்கும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது. உங்களையும் போல் சாதாரணமான கேள்விகளுடன் ஆரம்பமாகிய உரையாடல் தமிழினத்திற்கு ஏற்பட்ட அழிவினைப்பற்றியும் கதைத்துச்சிறிது நேரம் கூட ஆகவில்லை எனது நண்பன் என்னிடம் கூறிய வார்த்தை என்னைச்சிறிது நேரம் உறையவைத்தது. அவன் கூறிய வார்த்தை ” நீ என்னடாப்பா உனக்கு வேற வேலை வட்டி இல்லையா? அது தானே முடிந்து விட்டுது. பிறகென்ன இதைப்பற்றி ஒண்டும் யோசிக்காம உன்ர வேலையை பாரு

எமது இனம் அடக்கியாழப்பட்டுக்கொண்டுருக்கும் போதுதான் எம்மினத்தலைவன் எம்மைக்காக்க அவதாரம் கொண்டவன் என்று சொல்வதில் ஒரு பிழையும் இல்லை. அப்படியே எனது நண்பன் கூறியது போலவே தலைவனும் இவ்வாறே அலட்சியத்துடன் இருந்திருந்தால் இன்று நீ, நான் மற்றும் அனைத்துத்தமிழரும் இன்று உயிரோடு இருந்திருப்போமா என்பது கேள்விக்குறி தான்.
அவ்வாறு இருந்திருந்தாலும் நாம் அனைவருமே இன்று சிங்களவன்
கள்ளத்தோணி என்று எங்களைக்கூப்பிடும் போது மெல்ல நாணிச்சிரித்திருப்போம்.
கடிதக்காரன் வரும் போதும் அஞ்சி நடுங்கியிருப்போம்.
அதற்கும் மேலாக எங்களினுடைய பெயரின் பின்னெழுத்தை வெட்டிவிட்டு
சாரங்கன் அதாவது சாரங்க, ஆனந்ந, மயூர, ராகுல என்று சிங்களவனாகக்கூட நாம் மாறியிருக்க வாய்ப்புக்கள் உண்டு.
ஆகவே அன்று எமது தலைவனும் மாவீரர்களும் எனது நண்பன் நினைத்ததைப்போல் நினைத்துக்கொண்டு இருந்துவிடாமல் சிங்கள இனவெறியனிற்கெதிராகப்போராடினார்கள். எம்மினம் நடாத்திய ஆயுதப்போராட்டம் இன்று 20 நாடுகள் துணைகொண்டு நசுக்கப்பட்டதன் விளைவாக புலம்பெயர்வாழ் தமிழர்களாகிய எம்மிடம் தரப்பட்டது. அவற்றை எடுத்துச்செல்வதற்கு எம்மில் சில இளைஞர்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் பல பேர் ஓடி ஒதுங்கி வாழ்கின்றார்கள். இவர்கள் குறித்த கவலைதான் எல்லோரையும் வாட்டுகின்றது.

ஆனாலும் சிங்கள இனவெறியனை யுத்த கூண்டில் ஏற்றுவது சாதாரணமான விடயமல்ல. அதற்கு நிறையவே பணபலம் தேவைப்படும். அதனையும் விட ஒற்றுமையே அதிகம் தேவை. ஆனாலும் புலம்பெயர் மக்களாகியவர்கள் பேதங்களை மறந்து ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு” ஒற்றுமையே பலம்” என்பதை எதிரிக்கு உணர்த்தவேண்டியது எமது கடமை அல்லவா ?


சிந்தியுங்கள் செயற்படுங்கள்

இக்காணொலியை பற்றி விபரிக்க வார்த்தைகள் இல்லை. தமிழனாகப்பிறந்தது இவ்வளவு கொடுமைகளை அனுபவிப்பதற்காகவா

தோழர்களே என் தேழியரே கொஞ்சம் சிந்தனை செய்யுங்கள்.

உங்கள் கண்முன்னே தமிழினம் அழிவதுகண்டு வீரத்துடன் விரையுங்கள்.

எங்கே பாட்டுப்பாடி கூத்தடிக்கவல்ல, தமிழருரிமைப்போராட்டத்திற்கு

நன்றி

Tuesday, August 25, 2009

கதற வைக்கும் காட்சிகள்!

அகப்பட்ட துண்டு துணிகளைக் கொண்டு பெற்றுத் தாலாட்டிய பிஞ்சுப் பிள்ளைகளின் சிதறிய உடல்களை இயன்றமட்டும் பொதிந்து, மண் தோண்டி அடக்கம் செய்கிற அவகாசம் இல்லாத காரணத்தால் வீதியில் எரிந்தும் எரியாமலும் நின்ற வாகனங்களுக்குள் சொருகி வைத்துச் சென்ற தாய்மார்களின் சோக வலியை நீங்கள் அறிவீர்களா?
முள்ளி வாய்க்கால் - வட்டுவாகல் பிரதான வீதியில் மே-17-ம் தேதி நான் கண்டேன். அழுது புலம்பும் இடைவெளி கூட இல்லாத, கடவுளால் சபிக்கப்பட்ட இனமாய் நாங்கள் ஆனோம்.
கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை.
இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள்.
அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா? மல்ட்டிபேரல் (multibarrel) எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது.
குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள்.
உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன்.

ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள்.
நீங்கள் அழிவீர்களடா... சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா... என்றெல்லாம் மனது கொதித்தது.
கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன்.

இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளி வாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு.
குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளு கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. நடந்த வற்றின், நடந்து கொண்டிருப்பவற் றின் கொடூரங் களும், விபரீதங் களும் அந்தக் குழந் தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், ""தாய், தகப்பன்...'' என்று ஆரம்பிக்கவே, ""எல்லாம் இப்போது நான்தான்'' என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங் களைக் காட்டினார். ""இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்'' என்றார்.பெற்றோரை இழந்து, இரண்டு கால் களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பய ணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டி ருந்தது.வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் "அம்மா பசிக்குது... அம்மா பசிக்குது...' என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். ""அப்பா... எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா... தண்ணீர் விடாக்குது... கெதியா எழும்புங்கோ அப்பா...'' என்று குளறிக்கொண்டிருந்தான்.நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடிச் சொல்வாரே... ""அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு'' என்று... அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே... என்றெல்லாம் மனது எண்ணியது. முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே... ""தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்...'' என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன். உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு... : ""ஐயா, ஒபாமாவே... கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே... வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே... ஏமாற்றி விட்டீர்களே....'' என்று மனம் புலம்பியது.

- அருட் தந்தை ஜெகத் கஸ்பர்
நக்கீரன்

Friday, August 21, 2009

கவலைக்குரிய விடயமாகும்

வணக்கம் நண்பர்களே,
இன்று நீங்கள் பார்த்தீர்களானால் இலங்கையின் பூர்வீகக்குடிகளாக தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்பது பல சான்றுகள் மூலம் கிடைக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி எமது ஆய்வாளர்கள் பல நுால்கள் எழுதி இருக்கின்றார்கள். ஆனாலும் சமீபத்தில் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களால் வெளியிடப்பட்ட இலங்கையில் தமிழர் வரலாறு என்ற தலைப்பில் ஒரு முழுமையான வரலாறு (கி.மு. 300 கி.பி. 2000) காலப்பகுதியினை ஆதாரம் மூலமாக விரிவாக எழுதப்பட்டுள்ளது.
அதனை வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக்கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்ச்சி.
ஆனால் நான் இங்கு என்ன கூறவருகின்றேன் என்றால் நாங்கள் எமது வரலாறு பற்றியும், பண்பாடு, கலாசாரம் பற்றியும் கருத்திற்கொள்வதில்லை. ஒரு முக்கியமான காரணமாக மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற போரையும் கூறலாம்.

ஆனாலும் நாம் ஒன்றை மறந்து விட்டோம். ஒரு இனத்தில் பிறந்த மனிதன் தனது மூத்தகுடிகளின் வரலாற்றை படிப்பதன் மூலம் அவர்கள் விட்ட பிழைகளைத்திருத்தி நிகழ்காலத்தில் வாழ்க்கை பயணங்களை தொடர்கின்றான். ஆனால் எமது இனத்தை பொறுத்தவரையில் எமக்கு கடினமானதொன்றாகவே இருக்கின்றது. காரணம் சிங்களவன் எமது வரலாற்றுச்சான்றுகளை முழுமையாக மூடி மறைக்கின்றான். தமிழர்களின் அகழ்வாராய்ச்சிகளை நடாத்த விடும் பட்சத்தில் இலங்கை தமிழர்களின் நாடாகிவிடும் என்கின்ற பீதி தான்.

இதே நேரம் சிலர் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
ஆயுதப்போராட்டம் தொடங்கியிருக்காதிருக்கும் பட்சத்தில் தமிழர்கள் தங்கள் பிரதேசங்களிலேயே வாழ்ந்திருப்பர். அதன்மூலமாக கடைசி தமிழரின் பிரதேசங்களாவது வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் இருந்திருக்கும் என்பது அவர்களுடைய கருத்து. ஆனாலும் இன்று ஆயுதப்போராட்டம் மூலமாக தமிழர்கள் உயிர், சொத்து, பூர்வீகம் என்று எல்லாவற்றையும்
இழந்து எம்மினம் பசியாலும் பட்டிணியாலும் சிறைக்கூடாரங்களில் அடிப்படை வசதிகள் இன்று தினம் தினம் வீழ்கின்றார்கள்.
ஆனாலும் நாம் ஏன் ஆயுதப்போராட்டம் தொடங்கினோம்? அல்லது எமது கைகளில் கொடுக்கப்பட்டதா? என்ற நோக்கும் போது உண்மை தெளிவாக புலப்படும்.

சிங்கள இனவாதிகளினால் எமக்கு ஏற்பட்ட கொடுமைகள் கொஞ்சமல்ல. அவைகளை மனித சமுதாயமே ஏற்றுக்கொள்ள முடியாதவை. எமது பெண்கள் கணவன் முன்பே கற்பழிக்கப்பட்டாள், தீயிலிடப்பட்டாள், மற்றொரு பெண் மார்பகங்கள் அறுக்கப்பட்டாள், பாலியல் துன்புறுத்தல்கள் மூலம் கடும் சித்திரவதைகளிற்குள்ளாக்கப்பட்டு அவளின் முன்பே பிள்ளைக்கும் அதே கதைதான் நேர்ந்தது. இவ்வாறு கூறிக்கொண்டு போனால் தொடர்கதையாகும் எம்மவர் வாழ்க்கை.
இவை தான் எமது தலைவனை வீறுகொண்டெழச்செய்தன என்று கூறுவதில் ஒரு சந்தேகமும் இல்லை.

நீங்கள் யோசிக்கலாம் பல இயக்கங்களும் வீறுகொண்டெழுந்தனவே ஏன் அவர்களைப்பற்றிக்கூறவில்லையென்று. அவர்களும் கொதிப்படைந்து எழுந்தனர், ஆனாலும் தமது இலட்சியத்தை தவறவிட்டமையாலும் தாம் சென்ற பாதையிலிருந்து விலகி அந்நிய சூழ்ச்சியாளர்களின் வலையில் விழுந்தமையால் அவர்களால் எமது போராட்டத்தை நடாத்தமுடியவில்லை.அதோடு தமிழ் மக்கள் அனைவரினதும் ஏகோபித்த தெரிவே விடுதலைப்புலிகள் என்பது இன்று அனைவரிற்கும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெட்டத்தெளிவாக விளங்கும். உதாரணமாக தமிழரின் சுயநிர்ணய உரிமை, தேசம், ஈழம் என்றெல்லாம் கதைகளைக்கட்டிய மற்றைய இயக்கங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்ட வீழ்ச்சிக்குப்பிறகு சிங்களக்கொடுங்கோல் ஆட்சியாளர்களுடன் சேர்ந்து நின்று ஈழம் என்ற பெயரைக்கூட மாற்றுமளவிற்கு செல்லாக்காசாக இருக்கின்றன என்பதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள் என நினைக்கின்றேன்.

நான் சொல்ல வந்ததைவிட்டு ஏதோ அரசியல் பேசிக்கொண்டிருக்கின்றேன். அதற்கும் ஒரு காரணம் உண்டு எனக்கு பெரிதாக எழுதும் ஆற்றல் இல்லை. ஆனாலும் என் சகதோழர்களிற்கு எனக்கு தெரிந்த விடயங்கள் பற்றி கூற வேண்டும் என்ற ஆதங்கமே.

எமது பெற்றார்களும் ஒரு பெரும் பிழைகளை இன்று விட்டிருக்கின்றார்கள் அல்லது விட்டுக்கொண்டிருக்கின்றார்கள் அதாவது தமது பிள்ளைகளை வைத்தியத்துறைக்கும், பொறியியலாளர் போன்ற துறைகளில் படிக்கவைக்கின்றார்கள். எம்மவர் மத்தியில் வரலாற்றுத்துறை, அரசியல்துறை, பத்திரிகை செய்தியாளர், அரசியல் ஆய்வாளர் போன்ற துறைகளில் படிக்க வைக்க பெரும்பாலானோர்கள் விரும்புவதில்லை. தயவு செய்து பெற்றோர்களிடம் தாழ்மையாக வேண்டிக்கொள்வது நீங்கள் அவர்கள் சிறுவயதில் இருக்கும் போது உனது இலட்சியம் என்ன என்ற கேள்விக்கு பல வழிகளை தொடங்கிவிடுங்கள். அதாவது வைத்தியர், பொறியியலாளர் போன்றதுறைகளுடன் கூடிய மற்றும் பல துறைகளையும் கூறி அவர்களின் விருப்பத்திற்கேற்ற துறைகளைத்தேர்ந்தெடுப்பதற்கு அவர்களிடமே விட்டுவிடுங்கள்.

இன்று எம்மவர்களில் வரலாற்றாசிரியர்கள் போன்றோர் மிகக்குறைந்த அளவிலே உள்ளனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஆகவே சிந்தியுங்கள் செயற்படுங்கள்

Wednesday, August 19, 2009

சிறிய அறிமுகம்

நான் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்டவன்.
எனது நண்பர்கள் ”கிழட்டுப்பூசாரி” என்றும் ”கள்ளப்பூசாரி” என்றும் என்னைச்செல்லமாக அழைப்பார்கள். அதற்குக்காரணம் நான் எங்கு செல்லும் போதும் திருநீறு பூசுவது தான் காரணம்.

எனக்கு தமிழில் பெரிதாக எழுதத்தெரியாது. ஆனாலும் ஒரு அவாவின் காரணமாக எழுதிப்பழக முனைகின்றேன். அதோடு மட்டும் நின்றுவிடாது தமிழில் தட்டச்சுச்செய்து பழகும் வாய்ப்பாகவும் கருதுகின்றேன்
நன்றி